Wednesday, June 23, 2004

அன்புள்ள தங்கைக்கு,

பாட்டும் நானே; தாளமும் நானே என்று திருவிளையாடல் படத்தில் டி.எம் சௌந்தராஜன் சிவாஜிக்காக ஒரு பாட்டுப் பாடுவார். அதுபோல்
பாட்டு கற்றுக் கொள்வது என்பதை எவ்வளவு மாதிரியாக நான் முயற்சி செய்திருக்கிறேன் அல்லது எனக்காக முயற்சி செய்யப்பட்டுள்ளது !! எனக்கு 10 வயது இருக்கும்போது அப்பா அம்மா இருந்த ஊரில் எனக்குப் பாட்டு வாத்யார் ஏற்பாடு பண்ணினார்கள். அந்த ஊர் நகரமும் இல்லை; கிராமமும் இல்லை. தாலுகா ஆபீஸ் இருந்த ஊர். பாட்டு வாத்யார் ஒரு வயலின் வித்வான். வயது 60க்கு மேல் ஆகியிருந்தது. காலை வேளையில் ஏழரை மணிக்கு வந்துவிடுவார். சரளி வரிசை - ஜண்டை வரிசை என்று சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். இவர் சொல்லிக் கொடுத்ததை மறு நாள் காலை நாலரை மணிக்கு எழுட்ந்து சாதகம் பண்ண வேண்டும். விடியற்காலை எழுப்பி விட்டுவிடுவார்கள். தூக்கம் கலைந்திருக்காது. வாயை தண்ணீரில் கொப்பளைத்துவிட்டு பாட ஆரம்பிக்க வேண்டும். விடியற்காலை என்பதால் மற்றவர்களுக்கு தொந்ததர்வு ஆக்க் கூடாது என்பதால் கதவுகளை மூடிவிட்டுப் பாட வேண்டும். ஆனால் 10 நிமிஷ இடைவெளியில், என்ன குரலே கேட்கவில்லை ? வாயைவிட்டு உரக்க பாடு என்பார்கள். ஏதோ என்னால் முடிந்தவரை பாடி சாதகம் பண்ணுவேன். வாத்யார் கீதம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். பாட்டு நோட்டில் ஸ்வரங்கள் எழுதிவிட்டு மறு நாளிலிருந்து சாதகம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். 1 வாரம் கழித்து பிறகு வரவேயில்லை. பிறகுதான் தெரிந்தது அவர் கடவுளின் திருவடையைப் போய் சேர்ந்துவிட்டார் என்று! பாட்டுக் கற்றுகொள்வது நின்றது. எனக்கு விடியற்காலம் எழுந்து கஷ்டப்படவேண்டாமே என்று சந்தோஷம்.

ஆனால் அம்மாவுக்கு என் பாட்டு நின்று போனது பிடிக்கவில்லை. பெண் பார்க்க வரும்போது பாட்டு பாட தெரிய வேண்டுமே? அம்மாவே எனக்கு சில பாட்டுக்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். 2 வது பார்ம் அதாவது, 7 வது வகுப்பு படிக்கும்போது எங்கள் ஸ்கூலில் பாட்டு பீரியட் ஒன்று ஆரம்பித்தார்கள். நல்ல தமிழ் பாடல்கள் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு நாள் என் பாட்டு நோட்டை வாத்யார் கேட்டார். வாத்யார் என்றாலே ஒரே பயம். அதிலும் என் பாட்டு நோட்டைக் கேட்டு வாங்கி அதில் ஆங்கிலத்தில் ஏதோ டாக்டர் சீட்டு போல வேகமாக கிறுக்கிக் கொடுத்தார். நோட்டை அப்பாவிடம் காண்பிக்க சொன்னார். "சரி. நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதான் அப்பாவுக்கு எழுதியனுப்பியிருக்கிறார்" என்று பயந்து கொண்டே வந்தேன். நான் அப்போ படித்தது தமிழ் மீடியம். ஆங்கிலமே புரியாது. அப்பாவிடம் நோட்டை நீட்டினேன். அதைப் படித்துவிட்டு அப்பா சிரிக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு சொன்னார் - உன் குரல் வளம் நன்றாக இருக்கு. பாட்டுக் கற்றுகொடுங்கள் என்று எழுதியுள்ளார்" என்றார் அப்பா! மறுபடி நிம்மதியாக பெருமூச்சு விட்டேன்.

ஆனால் வாத்யார் என்னைவிடவில்லை. பாட்டு போட்டியில் கலந்து கொள்ள சொன்னார். அம்மா சொல்லிக் கொடுத்த பாட்டைப் பாடச் சொன்னார். முதன் முதல் அனுபவம் என்பதால் போட்டி வேளையில் மேடையில் போய் நின்றதும் ஒரே நடுக்கம். 200 - 300 தலைகளைப் பார்த்தவுடன் பாட்டு மறந்து போய்விட்டது. வியர்வை வெல்ளம். அழாமல் இருந்தால் போதும் என்று உடனே மேடையை விட்டு உள்ளே ஓடிப்போய்விட்டேன். மறுபடி ஒரு சந்தர்ப்பம் ஓடிப்போயிற்று.

4 வது பாரம் படிக்கும்போது - அதாவது 8 ம் வகுப்பு - மறுபடி பாட்டு போட்டியில் பங்கு எடுத்துக்கொண்டேன். நம்புகிறாயா? எனக்கு 2வது பரிசு கிடைத்தது. அப்பாவுக்கு அடுத்த ஊர் மாற்றலாகும்போது அங்கே பள்ளி இல்லையென்பதால் என்னை டவுனில் ஒரு பெண்கள் பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்தார்கள். அங்கே ஸ்கூல் பிரார்த்தனையில் பாடும் பெண் ஒரு நாள் வரவில்லை. Sister என்னைக் கூப்பிட்டு ஏதாவது தமிழ் பாட்டு பாடு என்றார். இப்போ பாடுகிற தைரியம் நிறையவே இருந்தது. பாடினேன். கொஞ்ச நாட்கள் கழித்து யாரோ அரசியல் தலைவர் ஒருவர் பெரிய ஹாலில் வருகிறார் என்று எங்களையெல்லாம் அங்கே அழைத்துப் போனர்கள். அங்கேயும் பாடவேண்டிய பெண் வர நேரமாயிற்று. Sister என்னைக் கூப்பிட்டுப் பாடச் சொன்னார். இந்த தரம் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் சினேகிதிகளெல்லாம் மிகவும் பாராட்டினார்கள்.

ஸ்கூல் படிப்பு முடிந்து வீட்டில் இருக்கும்போது அம்மா மறுபடி எனக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். நானும் ரேடியோவில் கேட்டு பாட்டுக்களைக் கற்றுகொள்ள ஆரம்பிதேன். பின், கல்யாணம் ஆயிற்று. கல்யாணத்தின்போது என்னைப் பாடச் சொன்னார்கள். அம்மா சொல்லிகொடுத்ததைப் பாடினேன். உறவுக்காரார்கள், கணவன் வீட்டினர் குரல் நன்றாக இருக்கிரது- சரியாக கற்றுகொண்டுவிடு என்றார்கள். ஹ்ஹ¤ம். அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.

நான் குடித்தனம் போன ஊரில் அக்கம்பக்கம் பூஜையில் கூப்பிடுவார்கள். அப்போ என்னைப் பாடச் சொல்வார்கள். இப்படி என் பாட்டு போய்கொண்டிருந்தது. ஆனால் இப்போ வரைக்கும் ராகமும் தெரியவில்லை; தாளமும் தெரியவில்லை. எனக்கு எம். எஸ்; எம்.எல்வி டி.கே.பி. தெரியும்; அவர்களுக்கு என்னைத் தெரியுமா?

அதுசரி; மற்றவை பின்,

அக்கா.

Tuesday, June 15, 2004

அன்புள்ள தங்கைக்கு,

நானும் அம்மாவும் சின்ன வயதில் விளையாடி இருக்கிறோம். உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இல்லை? எனக்கும் அம்மாவுக்கும் 15 வயதுதானோ என்னவோ வித்தியாசம். அதனால் நான் ஒரு பொம்மை மாதிரி அம்மாவுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தையாக இருந்தபோது அழகாகவும் இருந்திருக்கிறேன்.

( இதைத் தட்டச்சு செய்யும் தங்கையின் பி.கு: இப்ப மட்டும் குறைச்சலா என்ன? 63 வயது என்று சத்தியம் செய்யணும் :-) )

அந்தக் காலத்தில் குழந்தை என்றால் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அம்மாவும் கண்டிப்பும் கறாராகவும்தான் வளர்த்தார்கள். களி மண்ணில் சின்னதாக கொடி அடுப்பு போட்டுத் தருவாள் அம்மா. கொடி அடுப்பு என்றால் ஒரு பக்கம் விறகு வைத்து எரிக்க வழி விட்டிருப்பார்கள். இன்னொரு பக்கம் மூடி இருக்கும். ஆனால் மேலே வட்டமாக திறந்திருக்கும். அதாவது எரிகிற பாகத்தில் அதிக தீயும் வட்டமான பாகத்தில் மிதமான தீயும் இருக்கும்.

( தங்கை: நம்ம காஸ் ஸ்டவ் மாதிரி - ஒரு பெரிய அடுப்பு; இன்னொரு சின்ன பர்னர் - அது விறகு ஸ்டைல்; சரியா?)

சட்டி பானை கடையில் சின்னதாக பானை வாங்கி வருவாள் அம்மா. அந்தச் சின்ன அடுப்பில் சுள்ளி, சுள்ளியாக உள்ளே வைத்து அடுப்பை எரிய விட்டு, பானையை அதன் மேல் வைத்து தண்ணீர் விட்டுக் கொதிக்கும்போது டேபிள் ஸ்பூன் அரிசியை அதில் போடுவாள். அரிசி பதமாக வெந்ததும் துளி வெல்லம் போட்டு, நெய் சேர்த்து பொங்கல் ரெடியாகிவிடும். மொத்தமே ஒரு குழி கரண்டி பொங்கல்தான் இருக்கும். இதை எனக்கு விளையாட்டு காட்டுகிறேன் என்று தானே விளையாடி இருப்பாள் என்று நினைக்கிறேன். அம்மாவுக்கு 12 வயதில் கல்யாணம் என்றால் நான் பிறக்கும்போது 16 வயது.

எனக்கு 10 வயது ஆன பிறகு கல்லாங்கா விளையாடுவது பழக்கமாயிற்று. 5 அல்லது 7 கூழாங்கல் வைத்து ஒரு கல்லை மேலே போட்டு அது கீழே வருவதற்குள் இன்னொரு கல்லைக் கையில் கொத்திக் கொண்டு பின்னர் அதே கையால் மேலேயிருந்து வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். பிடித்தால் பாயிண்ட்ஸ். இல்லையென்றால் அவுட். அடுத்து மற்றவர் விளையாட வேண்டும்.

( தங்கை: ஓ, நினைவிருக்கிறதே.... நான் சின்னவளாக இருந்தபோது அம்மா நாங்கள் - நானும் தோழியும் - விளையாடும்போதும் கூட வருவாள்.)

இன்னொரு விளையாட்டு புளியங்கொட்டை கொத்தி விளையாடுவது. பழைய நாளில் புளியை வருஷாந்திரத்துக்கு வாங்கி ஸ்டோர் பண்ணுவார்கள். புளி மேலே ஓடும் உள்ளே கொட்டையும் இருக்கும். ஓட்டை உடைத்து குழவி அல்லது சுத்தியால் புளியை தட்டி கொட்டையை எடுக்க வேண்டும். ஒரு கூடை புளியங்கொட்டை சேர்ந்துவிடும். 4 அல்லது 5 பேர் விளையாட உட்காருவோம்.

( தங்கை: இந்த புளியங்கொட்டை விளையாட்டு என் பள்ளி நாள் வரை கூட வந்தது என்று நினைக்கிறேன். அம்மா புளி வாங்கியவுடன் உட்கார்ந்து இந்த புளியங்கொட்டை "சொத்து" சேர்க்க ஆரம்பித்து விடுவேன். நீ அப்போது திருமணம் ஆகி சென்று விட்டாய். இந்தப் புளியங்கொட்டை சொத்து, பல்லாங்குழி விளையாடுவதற்கு!! )

இந்த புளியங்கொட்டை விளையாடுவதும் கல் மாதிரிதான். ஒரு கொட்டை மேலே போட்டு, அது கீழே வருவதற்குள் கையில் கொள்ளும் அளவுக்கு கொட்டைகளை அள்ளிக் கொண்டு மேலேயிருந்து வரும் கொட்டையையும் பிடிக்க வேண்டும். இந்த மாதிரி சேர்ந்தவைகளை கூண்டாக கூறு கட்டி வைத்துக் கொள்ளணும். யார் ஜாஸ்தி கூறு கட்டியுள்ளார்களோ அவர்களே ஜெயித்தவர்கள். சில சமயம் மரப்பாச்சி பொம்மைக்கு அலங்காரம் பண்ணி சின்னதாக தும்பை பூவில் முறுக்கு மாதிரி பண்ணி பழங்கள் வைத்து அதற்கு கல்யாணம் செய்தும் விளையாடி இருக்கிறோம். அம்மாவே சின்னவள் என்பதால் என்னுடன் தோழி போல் இப்படி விளையாடத் தோன்றியிருக்கும். நீ பிறக்கும்போது அம்மாவுக்கு 27 வயது. அதனால் உன்னை குழந்தையாகவே பாவித்திருப்பாள்.

சரி; மற்றவை பின்.

அன்புள்ள அக்கா.

Wednesday, June 09, 2004

அன்புள்ள தங்கைக்கு,

சூரியனை வெள்ளி கடந்து செல்லும் சம்பவம் நாடெங்கிலும் வெகுவாகப் பேசப்பட்டது இல்லையா? டிவியில் பலர் அன்று கோவிலில் வழிபாடுகள் நடத்தினார்கள் என்று கேள்விப்பட்டேன்.லிதுவும் ஒரு கிரகணம் மாதிரிதான் என்று சிலர் சொன்னார்கள்.

நம் பக்கங்களில் கிரஹணம் அனுசரிக்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.னாங்கள் சின்னவர்களாய் இருக்கும்போது காவேரிக்கரையில் இருந்தோம். கிரஹணம் என்றால் அது ஆரம்பிக்கும் முன்னால் 6 மணி நேரம் முன்னதாகவே சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். ராத்த்ரி வேளையில் வந்தால் தூங்கி எழுந்தவுடன் கிரஹணம் முடிந்திருக்கும். ஆனால் மத்தியானம் 3 மணி 4 மணீ என்றால் ராத்திரி 9 மணி 10 மணிக்கு கிரஹணம் முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணி கூட குடிக்காமல் காத்திருப்பார்கள். சூரிய கிரஹணமோ சந்திர கிரகணமோ ஸ்வாமி சன்னதியில் விளக்கு எரிய விடுவார்கள். யார் நட்சத்திரத்துக்கு கிரஹணம் பிடிக்கிறதோ அவர்கள் ஒரு பனை ஓலை சுவடி அதாவது பட்டி கட்டிகொண்டுதான் தலைக்கு குளிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. ந்கம் கூட கிள்ள கூடாது. உள்ளே இருக்கும் குழந்தைக்கு ஊனம் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு. காவேரி கரை என்பதால் கிரஹணம் என்றால் வீட்டில் குளிக்கக் கூடாது. ஆற்றில்தான் குளிக்க வேண்டும். படுத்திருந்த பாய் தலகாணி இவைகளை தண்ணீரில் நனைத்து உலர்த்த வேண்டும். வீடு பூராவும் கழுவி விட வேண்டும். முதலில் வீட்டு பெரியவர்கள் யாராவது குளிப்பார்கள். எல்லோரும் பட்டினியாக இருந்ததால் முதலில் குளிப்பவர்கள் காபி, பால் போன்றவை தயார் பண்ணுவார்கள். பிறகு சிற்றுண்டியும் ஏதாவது தயாரிப்பார்கள். பழைய மீந்து போன ஆகாரங்களை வெளியில் கொட்டி விடுவார்கள். ஊறுகாய் தயிர், பால் போன்றவற்றிற்கு தர்ப்பை புல்லைப் போட்டு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

இப்படி கிரஹணம் என்றாலே பெரியவர்களுக்கு நிறைய வேலைகளும் குழந்தைகளும் பட்டினி கிடந்து பொறுமைக் கற்று கொள்வார்கள்.

ஆனால் இப்போ தலைக்கு குளிக்கிறோம். கிரஹண சமயம் 3 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கிறோ அவ்வளவுதான். யார் நட்சத்திரத்தில் கிரஹணம் பிடித்ததோ அவர்கள் மட்டை தேங்காயுடன் தட்சிணை வைத்து பிராமணருக்கு கொடுக்க வேண்டும். இன்றைக்கு கோயில் போய் அர்ச்சனை பண்ண சமயம் கிடைத்தால் போதும். எல்லாமே பகவான் செயல். அவரின்றி எதுவுமே அசையாது; நடக்காது.

மற்றவை அடுத்த கடிதத்தில்.

உன் அன்புள்ள
அக்கா.

Tuesday, June 01, 2004

ஏதடா, நிறைய கதை சொல்ல ஆரம்பிப்பது போல் தொடங்கினாளே, அதற்குள் காணாமல் போய்விட்டேன் என்று பார்த்தீர்களா? எனக்கு கணினியில் ஒன்றும் தெரியாது. ஆனால் நான் சொல்லும் விஷய்ங்கள் சுவாரசியாமாக இருப்பதாக சொல்லி என் தங்கைதான் இப்படி ஒரு பதிவு எனக்காக தொடங்கி வைத்தாள். நான் இருப்பது பெங்களூரில்; அவள் இருப்பது சென்னையில். அவ்வப்போது நான் சென்னை வரும்போது நான் எழுதிக்கொடுத்தவற்றை அவள் இங்கே போடுகிறாள். நீங்கள் பின்னூட்டம் விடுவதை அவள் எனக்குப் படித்துச் சொல்ல, நான் அதற்கு போனிலேயே பதில் சொல்ல, அதை அவள் இங்கு பதிய, ஒரு தொலைதூர பதிவாக இது இருக்கு. அதுதான் பதிவுகளுக்குள்ளே இடைவெளி. மன்னிக்கவும். இனிமேல், கடிதமாக எழுதி அவளுக்கு அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.

இந்த பதிவுக்காக நான் எழுதிக் கொடுத்தது:

கரியில் ஓடுகிற பஸ் பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அந்த பஸ்ஸில் எரிந்த கரி சாம்பலை சுத்தம் செய்யும் பையன் நினைவுக்கு வருகிறான். அவன் வேலை, பழைய சாம்பலை எடுத்து சுத்தம் செய்து, புது கரியைப் போட்டு தணலை உண்டாக்குவது. பிறகு காற்று விசிறி என்று ஒரு மெஷின் இருக்கும் - வீட்டில் காப்பிக்கொட்டை அரைக்க என்று ஒரு மெஷின் பாட்டி காலத்தில் இருக்குமே ஞாபகம் இருக்கா? - அதுபோல இருக்கும் இந்த மெஷின். அந்த மெஷினை சுழற்றி தணலுக்கு காற்று செலுத்துவான். இந்த வேலையைத் தவிர அவன் வேலை, பயணிகளின் சாமான்களை பஸ்ஸின் மேல் உள்ள கேரியரில் பஸ்ஸின் ஏணி வழியாக ஏறி கொண்டு போய் அடுக்குவது. அதற்கு அவனுக்கு காலணா, அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். இதை தவிர பயணிகளைக் கூவி அழைத்து பஸ்ஸில் அமர வைப்பவனும் அவனே. ராத்திரி 8 மணிக்கு மேல் பஸ் இருக்காது. 25 மைல் பயணத்துக்கு பகலில் எட்டணா சார்ஜ். ஆனால் ராத்த்ரி கடைச் பஸ் என்பதால் ஆள் பிடிப்பதற்காக, "திருச்சி நாலணா", திருச்சி நாலணா" என்று கூவி ஆள் சேர்ப்பான். அவனுடைய யூனிபார்ம் கரி படிந்த ஷர்ட்டும் கரி படிந்த பேண்டும்தான்.