Friday, April 16, 2004

அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். கிராமத்தில் தாத்தாவின் வீடு. அப்பா அம்மா இருந்த ஊரும் பக்கத்திலேயேதான் என்பதால் போகும்போதும் வரும்போதும் தாத்தா என்னையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்று விடுவார். அந்த காலத்தில் - அதாவது 1947 அல்லது 1948 என்று நினைக்கிறேன். அப்போது பஸ்களில் கரியைப் போட்டு தணல் உண்டாக்கி அந்த சூட்டில்தான் ஒட்டிக்கொண்டிருந்தன. அது ஏன் என்று இன்றும் எனக்கு புரியவில்லை. அந்த காலத்தில் ஏன் பஸ்களில் ரயில் இஞ்சின் போல் தணல் போட்டு ஓட்டினார்கள்? ஒரு வேளை டிராம் வண்டி அப்படி இருந்ததா? சரியாக நினைவில்லை. ஆனால் பஸ்களில் கரிபோட்டு ஓடியது நினைவு இருக்கு.

தாத்தா வீட்டில் ஒரு மாட்டு வண்டியில்தான் எங்கள் வீட்டுக்கு வருவார். வண்டியில் வைக்கோல் போட்டு பரப்பி - மெத்தென்று இருக்க - அதன்மேல் ஜமக்காளம் விரித்திருக்கும். மாட்டுக்குப் பெயர் ராமண்ணா.கிராமத்திலிருந்து கிளம்பும்போது பாட்டி எனக்கும் தாத்தாவுக்கும் தோசைகள் மிளாகய்ப்பொடி எண்ணெய் - தாராளமாக - தடவி கட்டிக் கொடுத்ஹ்டிருப்பார். எங்கள் பிரயாணம் காவேரிக் கரையோரமாகவே இருக்கும். வழியில் சில கிராமங்களும் வரும். ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் மாட்டு வண்டியை ஓரமாக கட்டி நிறுத்திவிடுவார் தாத்தா. தோசை மூட்டையை எடுத்துக்கொண்டு ஆற்று மணலில் போய் போய் உட்காருவோம். ஓடுகிற தண்ணீரில் கைகால் கழுவிக்கொண்டு வாழை இலையைப் பரப்பி தோசையை சாப்பிடுவோம். குடிப்பதற்கு ஓடுகிற காவிரி நீர்தான். இப்போதுபோல் பிஸ்லேரி / பெய்லி பாட்டில்கள் கிடையாது. சுத்தமாக ஜில்லென்று, சுவையாக இருக்கும் நீர். ரெண்டு கையாலுல் அள்ளி குடிப்போம். பின்னர் மறுபடி எங்கள் பயணம் தொடரும். தாத்தா மாட்டின் மேல் கயிற்றைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போ ராமண்ணா" என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பிப்பார். உண்ட களைப்பு - இருவரும் நன்றாக தூங்கி விடுவோம். எழுந்து பார்த்தால் வண்டி எங்கள் வீட்டு முன்னால் நின்று கொண்டிருக்கும். அம்மா எங்களை வரவேற்க வாசலுக்கு வந்திருப்பார். வாயில்லாத அந்த ஜீவன் இவ்வளவு பத்திரமாக எங்களை எப்படி சரியாக எங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து சேர்க்கும் என்று எனக்கு அதிசயம்.

Thursday, April 15, 2004

மாடு அசை போடுவதைப் போல என் பழைய ஞாபகங்களை அசை போடுகிறேன்.