Tuesday, May 02, 2006

அன்புள்ள தங்கைக்கு

நம்ம அம்மா நம்மபளை எப்படி வேலை செய்ய பழக்கினார் என்று ஞாபகம் இருக்கா? நவராதிரி தோவாளி பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் ரொம்பவே வேலைகள் வாங்கிவிடுவார். பொதுவாகவே 6 வயது ம்டுஹலே அம்மா எனக்கு சமையல் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார். பழைய நாட்கள் வழக்கப்படி " அந்த மூன்று நாட்களில்" நான் தான் சமையல் செய்ய வெண்டும். நான் சின்னவளாக இருந்தபோது அம்மா புளிக்காய்ச்சல், தேங்காய்பொடி, பருப்பு பொடி என்று செய்து வைத்திருப்பார். சாதம் மட்டும் பெரிய வென்கலபானையில் கரி அடுப்பில் நேராக வேக வைக்கவேண்டும். காபி பில்டரில் காபி போட் அவேண்டும். 8 - 9 வயதான பிறகு குழம்பு, ரசம் காய் எல்லாம் செய்யக் கற்றுகொடுத்தார். எல்லாமேஎ ஒரு பயத்டில்தான் அக்ற்றுக்கொண்டேன்.
பண்டிகை நாள் வந்துவிட்டால் அம்மாவுடனேயே சமியல அறையில் நிற்க வேண்டும். அம்மா மாவு சலிக்க பேப்பர் கொண்டுவா என்பார். அடுத்ஹ்டது சல்லடையில் சலிக்க வேண்டும். சகக்ரையை கொண்டுவா - பிறகு நெய் கொண்டுவா என்று ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். சரி. கொஞ்சம் வெளியில் போய் நிற்கலாம் என்றால் ஏலக்காய் பொடி பண்ணு. முந்திர் பருப்பு சின்னதாக ஒடுத்துக் கொண்டு வா என்பார். ஆக மொத்தம் எல்லா சாமான்களை எடுத்து கொடுத்து ஒத்தாசை பண்னிக்கொண்டே அம்மா பட்சணம் பண்ணும் விதம் மனசில் ரெகார்டு ஆகிவிடும். அதான் அம்மா பட்சணம் செய்தாகிவிட்டதே என்று வெளியே கிளம்பினால் பட்சணங்கள் எடுத்டு வைக்க டப்பாவை துடைத்து எடுத்துவா என்பார். ஆக மொத்தம் அமாதான்மொத்தம் பட்ச்ணம் செய்திருக்கிறார். ஆனால் இபப்டி ரெகார்டு ஆனது கல்யாணம் ஆகி புக்ககம் போகும்போது சௌகரியமாக இருந்தது. என்னுடைய மச்சினர் வந்தபோஹ்டு என் மாமியார் அவருக்கு முதன் முதலாக ஸ்வீட் பண்ணச் சொன்னார். அம்மா பண்ணினதெல்லாம்ஞாபகத்துகு வர, மைதாவும் பாலும் சகக்ரையும் கலந்து கேசரி பவுடர் போட்டு நெய் குத்தி கிளறி அல்வா பண்னிக்கொடுத்தேன். என் மச்சினர் நன்றாக இருக்கிறதென்று இன்னும் கொஞ்சம் கேட்டரே பார்க்கணும்!!

Wednesday, May 11, 2005

அன்புள்ள தங்கைக்கு,

இன்னிக்கு Hepatitis B இஞ்ஜெக்ஷன் போட்டுக்கொள்ள போனேன். பேத்தியும் பயந்து கொண்டே வந்தாள். எனக்கு சின்ன வயதில் அப்பா காலரா இஞ்ஜெக்ஷன் போடும் வைபவம் ஞாபகத்துக்கு வந்தது. எங்கேயாவது காலரா வந்துவிட்டால் அப்பா நம் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கெலாம் ஊசி போட்டு விடுவார். அப்பா டாக்டர் என்பதால் மற்றவர்களும் அவர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். எனக்கு சின்ன வயதில் ஊசி என்றாலே பயம். முதலில் அப்பா ஒரு பேஸினில் ஊசி போடும் பெரிய டியூபுகளை போட்டு வெந்நீரில் கொதிக்க வைப்பார். பிறகு ஊசியைப் பொறுத்தி மருந்தை ஊசியால் உறிஞ்சி எடுத்து பின்னர் அது சரியாக வருகிறதா என்று பார்ப்பார். கையில், பஞ்சில் ஸ்பிரிட்டை தோய்த்து தேய்த்துவிட்டு பிறகு ஊசியைக் குத்துவார். நான் இதெல்லாம் பார்த்தே எனக்கு ஊசி வேண்டாம் என்று அழ ஆரம்பிப்பேன். அப்பா எனக்கு சமாதானமாக "உனக்கு என்று மெல்லிசாக ஊசி வைத்திருக்கிறேன் பார். எறும்பு கடிக்கிறா போலதான் இருக்கும். வலிக்காது என்று சொல்வார். பேசிக்கொண்டே ஊசியைக் குத்திவிடுவார். ஒரு தரம் எனக்குக் கட்டை விரலுக்குப் பக்கத்தில் ஏதோ குத்தி வீங்கிக் கொண்டது. அப்பா அதை கீறி விட வேண்டும் - இல்லையானால் septic ஆகிவிடும் என்றார். நான் அப்பவே எனக்கு ஒண்ணும் பண்ண வேண்டாம் என்று அழ ஆரம்பித்து விட்டேன்.
நம் அப்பாவைப் பார்க்க முத்துப் பிள்ளை என்பவர் வாரம் முறை வருவார். அவருக்கும் இது மாதிரி ஊசிகளை வெந்நீரில் கொதிக்க வைத்து எல்லா ஏற்பாடுகளும் நடக்கும். எனக்காக கையில் கட்டியை கீறுவதற்காக எல்லா ஏற்பாடும் பண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் என்னிடம் முத்துப் பிள்ளைக்காக என்று சொல்லப்பட்டது. அம்மா ஒரு பக்கம் என்னைப் பிடித்துக்கொள்ள என் கையை ஆடாமல் அசங்காமல் கோபால் - அப்பாவின் அஸிஸ்டெண்ட்"- பிடித்துக் கொள்ள கட்டியைக் கீறி கட்டும் போட்டாகிவிட்டது. ஒரே அலறல்தான்.
அப்புறம் டிரெஸ்ஸிங் ஒரு வாரம் என்று என் வைத்தியம் நடந்தது. இப்போது கூட என் கட்டைவிரலில் ஒரு வடு மாதிரி இருக்கே? அதன் கதை அதுதான்.
இதுபோல், எனக்கு 15 வயது ஆனபோது அம்மா எனக்காக 8 கல் பேஸரி - வைர மூக்குப்பொட்டு வாங்கி மூக்குக் குத்திக்கொள்ள வேண்டும் என்றார். எனக்கு ஒரே கலக்கம். கொஞ்சம் பெரியவளாகிவிட்டேனே? குழந்தை மாதிரி அழமுடியுமா என்ன? ஆனாலும் அம்மாவிடம் சொன்னேன். ரொம்ப வலிக்கும்மா... கொஞ்சம் மயக்க மருந்து கொடுத்துவிட்டு பிறகு மூக்கைக் குத்டுங்கள் என்றேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒரு வாரத்துக்கு இதுதான் எல்லோருக்கும் ஜோக். ஹ்ம்ம்.. அப்புறம் வலிக்க வலிக்க குத்திக்கொண்டுவிட்டேன் என்பது வேறு கதை.
********* *********** ************தீபாவளி சமயம் இன்னும் வரவில்லை. ஆனாலும் என் நினைவு அந்த நாளில் தீபாவளி கொண்டாடியதை அசை போடுகிறது. அப்போதெல்லாம் பண்டிகை என்றாலே ஒரே சந்தோஷம்தான். அதுவும் தீபாவளி - கேட்கவே வேண்டாம். விடியற்காலையில் எழுந்து இருட்டிலேயே குளித்துவிட்டு புதுசு கட்டிக்கொண்டு பட்சணங்கள் சாப்பிடுவது, பட்டாசு கொளுத்துவது என்று எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.
கல்யாண வீடு மாதிரி வீட்டுக்கு வீடு நாதசுவரம் வந்து வாசிப்பார்கள். வாழ்த்து தெரிவிக்க எல்லோரும் நம்ம வீட்டுக்கு வருவார்கள். நாமும் எல்லோர் வீட்டுக்கும் பட்சணத்தட்டை எடுத்துக் கொண்டு போய் வாழ்த்துக்கள் தெரிவிப்போம். இந்தக் கால குழந்தைகளுக்குத் தெரியாத சந்தோஷம் இது.
சாதாரண புது துணி போட்டுக் கொண்டால் கூட நாம் ராஜகுமாரி என்ற நினைப்பு நமக்கு. புதுத் துணி போட்டுக் கொண்டொஇருக்கிறோம் என்பதுதான் மகிழ்ச்சி. அது உயர்ந்ததோ, மலிவோ என்பதெல்லாம் யோசித்துக் கூட பார்த்தது இல்லை.
இந்த சமயத்தில்தான் எனக்கு 7 வயது இருக்கும்போது ஒரு முறை என் பாவாடையில் பட்டாசு பட்டு நெருப்பு பற்றிக் கொண்டது. அப்பா கூடவே நின்று கொண்டிருந்தார். நான் சாட்டையோ, கம்பி மத்தாப்போ கொளுத்தியபடி இருந்தேன். பொறி பட்ட உடனே அப்பா கவனித்துவிட்டார். நெருப்பு பெரிதாக ஆகும் முன்பு சட்டென்று தன் இரண்டு கைகளாலும் நெருப்பு பற்றிக்கொண்ட பாவாடையைப் பிடித்து கசக்கினார். இதனால் எனக்கு உடம்பில் ஒன்றும் காயம் படாமல் தப்பித்தேன். ஆனால் பாவம், அப்பா கையெல்லாம் புண்ணாகிவிட்ட்து. நீலமாக ஏதோ கைகளில் தடாவிக் கொண்டார். பிறகு புண்ணும் ஆறிவிட்டது.

மற்றவை பின்.
அன்புள்ள அக்கா

Sunday, May 01, 2005

அன்புள்ள தங்கைக்கு,

என் பேரன் அமெரிக்காவிற்கு மேல் படிப்பு படிக்கப் போகிறான். அவன் இன்று கேட்ட கேள்விக்கு நான் நீண்ட பதில் சொல்லும்படியாக ஆயிற்று. பணம் எவ்வளவு முக்கியம்? பணம் இருந்தால்தான் மதிப்பா? பணம் நிறைய சம்பாதிப்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளா? இவை அவன் கேள்விகள்.
பணம் முக்கியம்தான். முக்கியமான தேவைகளுக்கு கூட பணம் இல்லாவிட்டால் கஷ்டம். முக்கியமான தேவைகள் என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. பெரிய சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் - அடிப்படை தேவை, சாப்பாடு, உடை, தங்குவதற்கு நிழல் இவை அவசியம்தான் என்று.
ஏழை நினைக்கிறான்; கூழ் சாப்பிட உப்பும், உடம்பு அமர ஓலை குடிசையும் உடுத்திக்கொள்ள துணியும் இருந்தால் போதும் என்று. அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று சொல்கிறார்கள். அளவு என்பது தனி மனிதனின் எண்ணம். ஆனால் நமக்கு மேலே இருக்கிறவர்களை பார்த்து அந்த மாதிரி உயர்ந்த சாமான்கள் இல்லையே; ஆடம்பரமான வீடு, உடைகள் நகைகள் இல்லையே என்று நினைக்கக் கூடாது.

ஆமாம் பணம் இருந்தால் நான் பணக்காரன் என்று எல்லோரும் மதிக்கிறார்கள். ஆனால் வெறும் பணம் இருப்பதாலேயே மதிக்கிறார்கள் என்று சோல முடியாது.பணம் என்பது செல்வம். இதை செலவழித்து மற்றவர்களுக்கு உபயோகமாகும்போது அது உயர்ந்த பொருளாக ஆகிறது. குணமும் இருந்தால்தான் பணம் உயர்ந்ததாக ஆகிறது.

பணம் சம்பாதிப்பது அவசியம்தான் ஆனால் நாம் நமக்காக மட்டும் சம்பாதிக்காமல் தன் குடும்பத்தாருக்காகவும் மற்றவர்களுக்காகவும் சம்பாதிப்பதில்தான் பெருமை இருக்கு. நாம் மட்டும் சந்தோஷமாக இருந்து கொண்டு மற்றவர்கள் கஷ்டபப்ட்டுக் கொண்டிருந்தால் பார்க்க கஷ்டமாக இருக்கும். மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காகவும் சம்பாதிக்கும்போதுதான் நாம் சம்பாதிப்பதில் அர்த்தம் இருக்கிறது.
சிலர் சொல்வார்கள் - பணத்தைக் கொண்டு அம்மா அப்பாவை வாங்க முடியாது என்று. ஆனால் பணத்தால் வரும் வசதிகளால் அவர்களைத் திருப்திபடுத்த முடியும். சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் கடைக்கு போய் பணம் கொடுத்து சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாதுதான்.

**************

இன்றைக்கு ரொம்ப நாள் கழித்து என்னுடைய 42 வருட சினேகிதி போனில் கூப்பிட்டாள். நாங்கள் வடக்கே இருந்தபோது எதிர் எதிர் வீடில் இருந்தோம். காலையில் 11 மணி அளவில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வாசலுக்கு வருவோம். அவள் வீட்டு புல் தரையில் அரை மணி நேரம் பேசிக் கொள்வோம். அன்றைய சமையல், குழந்தைகள், உடம்பு நிலை என்று தினம் பேசுவதற்கு ஏதாவது இருக்கும். இந்த தினசரி பேச்சுக்களல் எங்கள் இரண்டு பேருடைய மனதுக்கும் கிடைத்த சந்தோஷம், நிம்மதிக்கு அளவு கிடையாது. வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போனாலும் கடிதம் மூலமாவது தொடர்பு கொண்டிருந்தோம். இப்போ வயதான பிறகு ஒரே உர்ரில் இருக்கிறோம். அதனால் இப்போதும் போனில் பேசிக் கொள்கிறோம். நேரில் சந்திப்பது குறைவுதான். ஆனாலும் போனில் பேசுவதே சந்தோஷமாக இருக்கிறது.
அவள் பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். பிள்ளையும் மருமகளும் டில்லியில் இருக்கிறார்கள். பிள்ளை, பெண் இவர்களிடமிருந்து போன், ஈமெயில் வரவில்லையென்றால் கவலைப் படுவாள். கடந்த 2 வருடங்களாக மாற்றல் ஆகி பென்ணும் மாப்பிளையும் இதே ஊருக்கு வந்திருந்தார்கள். அதனால் பேரன் பேத்தியுடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். - வயதான இயலாமை இருந்தாலும், நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கணவன் மனைவி இரண்டு பேருமே அவர்களுக்கு உபகாரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போ அவர்கள் மீண்டும் அமெரிக்க திரும்பிவிட்டார்கள்.

வீடு யாருமே இல்லாத மாதிரி வெறிச்சோடி போயிற்று. என்னுடன் பேசினால் மனசு சமாதானமாக இருக்கும் என்று பேசினாள். குழந்தைகள் நம்ம்முடன் இருக்கப் போவதில்லை. வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள், பாசம் இருகக்கூடாது என்றும், தெய்வம்தான் சாஸ்வதம் என்றும் படிக்கிறோம். ஆனாலும் குழந்தைகள் இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்கள், யாரை யார் தொந்திரவு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள், சரியாக சாப்பிடுகிறார்களா, என்று இந்த மாதிரி கவலைகள் என்று என்னுடன் பகிர்ந்து கொண்டாள். நானும் வள் மாதிரிதான்., இந்த மாதிரி பலஹீனங்கள் படுத்தும். ஆனால் அன்றைக்கு நான் தெம்பாக இருந்ததால் சொன்னேன்; " நாம் கதா கால§க்ஷபத்திற்கு போகிறோம். கதை சொல்பவர் சொகிறார். மனிதனாக பிறந்த பிறகு மனதைக் கட்டுப் படுத்திக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு தித்திப்பு பிடிக்கிறது என்றால் இன்னும் வேண்டும் என்று சாப்பிடுகிறோம். சரீரத்தில் ஏதாவது புண் வந்தால் சரியாக ஆறுவதற்கு முன் அரிக்க ஆரம்பிக்கிறது. சொறிந்தால் புண் ஆறாமல் இன்னும் ஜாஸ்தியாகும் என்றும் நமக்கு தெரியும். ஆனாலும் சொறிந்தால் இதமாக இருக்கிறது என்று சொறிகிறோம். இந்த பந்தம் பாசம் எல்லாமும் அப்படிதான். அதில் ஊறிப்போனால் எதிர்பார்ப்புகள் வரும். எதிர்பார்த்து கிடைக்கவில்லையானால் வருத்தப் படுகிறோம். அதற்காக சம்சாரத்தில் இருப்பவர்கள் சம்சாரத்தில்தான் சாரமாக இருக்க முடியும்; சந்நியாசி ஆகமுடியாது. சம்சாரிக்கு சம்சாரத்திலும், சந்நியாசிக்கு சன்நியாசத்திலும்தான் சாரம் இருக்கிறது. இராமாயணத்தில் லக்ஷ்மணருக்கு ராமர் சொல்கிறார். நான் பகவானாக இருந்தாலும் மனிதனாக பிறந்திருப்பதால் அனுபவிப்பதை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று.

ஒரு வயதான கிழவி ரொம்ப வருசஹ்ங்களாக மண் பானையும் விளக்குமாறும் உபயோகபப்டுத்தி வந்தாள். ஒரு நாள் பானையும் இடைந்து போயிற்று. விளக்குமாறும் பிய்ந்து போயிற்று. அவளுக்கு துக்கம் தாங்கமுடியவில்லை. பகவனை நோக்கி அழுகிறாள். அப்போது பகவான் அவளிடம் ஏன் அழுகிறாய்; உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பாட்டி உடையாத பானையும் பிய்ந்து போகாத விளக்குமாறும் என்று கேட்டாளாம். அப்பவும் பகவாந்தான் சாஸ்வதம் என்று புரியாமல், கேட்க்க தோன்றாமல், இந்த லோக வஸ்துக்களே அவளுக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது!! இப்படித்தான் நாமும் நிஜம் இதுதான் என்று தெரிந்தும், பாசம், பந்தம் ஆசையென்று திரிந்து கொண்டிருக்கிறோம்.

****************

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது இந்த என் 63 வயதில் நன்றாகவே தெரிகிறது. தெய்வத்தை வணங்குகிறோம்; நேசிக்கிறோம். பெரியவர்கள் சொல்கிற மாதிரி தெய்வத்தை தேடி எங்கேயும் போக வேண்டாம். மந்துக்குள்ளேயேதான் இருக்கிறார். ஆனால் கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு வருத்தமாக அதை மறந்து விடுகிறோம். தெய்வத்தை அலங்கரித்து ஆராதனை செய்தால் மனம் நிறைவாகிறது.

அது மாதிரி சின்னக் குழந்தையப் பார்த்தவுடன் அதன் சிரிப்பு நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தூக்கி வைத்துக் கொண்டாடினால் மாந்துக்கு நன்றாக இருக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை என் குழந்தைகளும் குழந்தைகளாக /சிறியவர்களாக இருந்தார்கள். ஆனால் சம்சாரத்தில், வீட்டு வேலைகள் நாள் பூரா ஏதாவது இரூந்து கொண்டிருக்கும். அப்போதெல்லாம், குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுப்பது, குளிப்பாட்டுவது எல்லாமே கூட ஏதோ வேலையின் பளுவாகதான் இருந்ததே தவிர, வேறு ஒன்றும் தோன்றியதில்லை. போதாததுக்கு அந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு தாயின் கையில் மட்டுமே இருந்தது. அம்மா சொல்வார்; இப்படி வளர்த்து விட்டிருக்காளே என்று அம்மாவைதான் குறை கூறுவாஅர்கள். குழந்தைகளுக்கு கெட்ட பெயர் என்றால் அம்மாவுக்கும் சேர்த்துதான் என்று.

அதனால் குழந்தைகளை ஒருவித யந்திரத்தனத்தோடு வளர்த்தோமோ என்று தோன்றும். இன்று அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டனர்.
பேரன் பேத்தி பிறந்து விட்டார்கள். இப்போ அவர்களை நான் ரசிக்கிறேன். ஒவ்வொரு அசைவிலும் படியிலும் நிறைய வித்தியாசங்கள். என்னுடைய பேத்தியோடு இப்போ நிறைய பொழுதுகளை கழிக்கிறேன். அவளுக்கு கதை கேட்க பிடிக்கும். பாட்டு கேட்பது / பாடுவது பிடிக்கும். நான் ஏதாவது கைவேலை செய்தால் பார்த்து ரசித்து தானும் அதுபோல் செய்ய ஆசைப்படுவாள். நான் தலைவலி, கால்வலி என்று படுத்தால் உடனே கையை / தலையைப் பிட்த்துவிடுகிறேன் என்பாள். மொத்தத்தில் நானும் அவளும் சினேகிதிகள் மாதிரி.

இன்னிக்கு ஏதோ ஒரு chart வரைந்து ஸ்கூலுக்கு எடுத்துப் போனாள். அவள் வரையும்போதே நான் பார்த்திருந்தேன். இருந்தாலும் முடிந்தவுடன் பார்க்கவில்லை. ஸ்கூல் போகும் அவசரத்தில் எடுத்து வைத்துக் கொண்டுவிட்டாள். ஆனால் போகும்போது என்னிடம் வந்து " பாட்டி, sorry பாட்டி, உங்களிடம் காண்பிக்காமல் எடுத்டு போகிறேன். ஸ்கூலில் காண்பித்துவிட்டு மறுபடி வீட்டுக்கு கொண்டுவருவேன். அப்போ நீங்க பார்க்கலாம்" என்றாள். பாவம், குழந்தைக்குதான் எவ்வளவு பாசம்?

**********************

நம் அம்மா நம்மை எப்படி வேலைகள் செய்ய பழக்கினார் என்று நினைவிருக்கா? நவராத்திரி, தீபாவளி என்று பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் போதும். நிறைய வேலைகள் வந்துவிடும்.
6 வயது முதலே அம்மா எனக்கு சமையல் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் அம்மா. பழைய நாட்கள் வழக்கப்படி அம்மா மாத விலக்கு இருக்கும் மூன்று நாட்கள் நான்தான் சமையல். நான் சின்னவளாக இருந்தபோது அம்மா புளிக்காய்ச்சல், தேங்காய்பொடி பருப்புப் பொடி என்று செய்து வைத்திருப்பாள். சாதம் மட்டும் பெரிய வெங்கலப்பானையில் கரி அடுப்பில் நேராக வைக்க வேண்டும். காபி பில்டரில் காபி போட வேண்டும். 8 - 9 வயது ஆனபிறகு குழம்பு, ரசம், காய் எல்லாம் செய்யக் கற்றுக் கொடுத்தார். எல்லாமே ஒரு பயத்தில் கற்றுக் கொண்டேன்.

பண்டிகை நாள் வந்துவிட்டால் அம்மாவுடன் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும். அம்மா மாவு சலிக்க பேப்பர் கொண்டு வா என்பார்; பிறகு அதை சல்லடையில் சலிக்க வேண்டும். சர்க்கரை கொண்டுவா, நெய் டப்பாவை எடுபென்று ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். சரி; கொஞ்சம் வெளியில் போய் நிற்கலாம் என்று போக ஆரம்பித்தால், ஏலக்காய் பொடி பண்ணு, முந்திரிப் பருப்பு சின்னதாக ஒடி என்பார். ஆக மொத்தம் எல்லா சாமான்களையும் எடுத்து கொடுத்து ஒத்தாசை பண்ணிக் கொண்டே அம்மா படசணம் பண்ணும் விதமும் மனதில் நன்றாக ரிகார்ட் ஆகிவிடும். சரி, அதான் அம்மா பட்சணம் பண்ணியாச்சே, நாம கொஞ்சம் வெளியெலே போகலாம் என்று பார்த்தால், உடனே அம்மா " பட்சணங்கள் எடுத்து வைக்க டப்பாவை துடைத்து எடுத்து வா" என்பார். ஆக மொத்தம் அம்மாதான் பண்ணியிருக்கிறார். ஆனா நாம்பளும் வேலைஅயைக் கற்று கொண்டுவிடுவோம்.

இப்படி கற்றுகொண்டதுதான் புக்ககம் போனபோது சௌகரியமாக இருந்தது. என்னுடைய மச்சினர் வந்தபோது என் மாமியார் அவருக்கு முதன் முறையாக ஸ்வீட் பண்ண சொன்னார். அம்மா செய்ததெல்லாம் ஞாபகத்துக்கு வர, மைதாவும் பாலும் சர்க்கரையும் கலந்து கேசரி பவுடர் போட்டு நெய் குத்தி கிளறி அல்வா செய்து கொடுத்தேன். என் மச்சினர் நன்றாக செய்திருக்கிறாய் - இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டாரே, பார்க்கணும் !!

மொத்தமாக ஒரு பெரிய கடிதம் அனுப்பிவிட்டேன். அடுத்து நேரம் கிடைக்கும்போது, நினைவுக்கு வரும் விஷயங்களை இன்னும் எழுதி அனுப்புகிறேன்.

உன் அன்புள்ள அக்கா.

Tuesday, February 01, 2005

அன்புள்ள தங்கைக்கு,

ரயில் பிரயாணமும் நானும் - அல்லது ரயில் பிரயாணங்களில் நான் - என்று யோசித்து பார்க்கிறேன்.

நான் சின்னவளாக 6 அல்லது 7 வயதாக - இருந்தபோது எனக்கு ரயில் பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அப்பா பெரும்பாலும் பஸ்ஸில்தான் அழைத்துப் போவார். ஒரு வேளை நாம் போகும் ஊருக்கெல்லாம் அப்போது ரயில் இல்லையாயிருக்கும்; அல்லது பஸ் எளிதாக / நிறைய இருந்திருக்கும். இல்லையென்றால் பஸ்ஸில் பயண நேரம் குறைவாக இருந்திருக்கலாம். அப்பாவுடன் பஸ் பயணம் என்றால் எனக்கு ஒரே பயம். காரணம் கண்டக்டரிடம் அல்லது சரியாக நடந்து கொள்ளாத சக பிரயாணியுடனோ ஏதாவது வாக்குவாதம் வந்துவிடும். எனக்கு சின்ன வயதில் யாராவது கத்தி பேசினால் பிடிக்காது. நான் ஒரு சாதுவான பெண். ஆனால் ரயில் பயணத்தில் இந்த தொந்தரவெல்லாம் கிடையாது. இடம் தாராளமாக இருக்கும்.அதுவும் அப்போதெல்லாம் ரயிலில் மூன்று வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பில் சாய்ந்துகொள்ள, உட்கார்ந்து கொள்ள எல்லாமே மெத்தை தைத்ததாக இருக்கும் ( இப்போதான் எல்லா வகுப்புகளிலுமே இருக்கே). முதல் வகுப்பில் நான்கு பேர்தான் இருக்கலாம். இரண்டாம் வகுப்பில் உட்கார மாத்திரம் மெத்தை. சாயும் இடத்தில் மரம்தான். இதில் 6 பேர் பயணம் செய்யலாம். மூன்றாம் வகுப்பில் எல்லாமே மரம்தான். ஒரு சீட்டில் நான்கு பேர் நெருக்கியடித்து உட்காரணும். கும்பலாக இருந்தால் இன்னும் நிறைய பேர் நெருக்குவார்கள். அப்பா 40 மைல் பயணத்துக்கு இண்டர் வகுப்பில் அழைத்துச் செல்வார்.

திருச்சி ஜங்ஷனில் ஐஸ்கிரீம் கடை இருக்கும். போனவுடன் ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் அப்பா ஐஸ் fruit salad வாங்கி தருவார். ஒரு பெரிய கண்ணாடிக் கோப்பையில் விதம் விதமாக பழங்கள் போட்டு ஐச்கிரீமும் சேர்த்து சாப்பிடுவது அந்த வயதில் எனக்கு மகா சுகமான அனுபவம். அதன் விலை 4 அணாதான். அப்பாவின் கண்டிஷன் பிரகாரம் அவர்களாக எது கொடுத்தாலும் சாப்பிடணும். எனக்கு வேணும் என்று கேட்க கூடாது. ஆனால் பிரயாணத்தின்போது அப்பா ரொம்ப அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். இன்னொரு ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா என்று கேட்டு நான் தலையாட்டியவுடன் இன்னொரு கப் வாங்கித் தருவார். எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமோ :-)ஒரு வேளை இதற்காகவே நான் ரயில் பயணத்தை விரும்பினேன் என்று நினைக்கிறேன்.

இதை ஞாபகம் வைத்துக்கொண்டுதான் பின்னர் நான் பெரியவளாகி புக்ககம் போன பின்னர் தம்பியும் நீயும் என்னை ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வரும்போது ஐஸ்கிரீம் வாங்கும் வழக்கம் இப்படிதான் வந்தது. நீ என்னைவிட 11 வயது சின்னவள்; அவன் 8 வயது சின்னவன். அப்பா மாதிரி நானும் உங்களை இன்னும் ஐஸ்கிரீம் வேண்டுமா என்பேன்; உங்களுக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும். எல்லோரும் சேர்ந்து அனுபவிப்பது இன்னும் சந்தோஷம். முதல் சம்பவத்துக்கும் இரண்டாம் சம்பவத்துக்கும் 17 வருஷம் இடைவெளி. ஆனாலும் சந்தோஷங்கள் ஒன்றுதானே?

எனக்கு இன்னொரு காரணத்தினால் ரயில் பயணம் பிடிக்கும். நம் பெரியம்மா பையன் என்னைவிட ஒரு வயது பெரியவன். கோடை விடுமுறையில் சென்னையிலிருந்து கிராமத்துக்கு குடும்பத்தோடு வருவார்கள் - தாத்தா பாட்டியைப் பார்க்க. பெரியப்பா ரயில்வேயில் இருந்தார். இவன் இருக்கானே, அவன் ரயில் வந்ததைப் பெரிய கதையாக சொல்வான். மெத்தை தைத்த வண்டியில் வந்தோமாக்கும்; நாங்க மட்டும்தான் அந்த பெட்டியில். நன்றாக படுத்து தூங்கிக் கொண்டு வந்தோமாக்கும்" என்பான். பெரியம்மாவும் அப்போ அந்தக் காலப்படி மடிசார் புடவை உடுத்தி ரொம்ப கம்பீரமாக இருப்பார். வைரத் தோடு, மூக்கு பொட்டு, கழுத்தில் சிவப்பு கல் அட்டிகை, இடுப்பில் ஒட்டியாணம், கை நிறைய வளையல்கள், கையில் வெள்ளிக் கூஜா, என்று அவர் வண்டியைவிட்டு இறங்கி வரும்போது எனக்கு அவரை பெரிய வி ஐ பி என்றுதான் தோன்றும். நாமும் இந்த மாதிரி ரயிலில் சௌகரியமாக பிரயாணம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கும்.

இதற்குப் பிறகும் பஸ்ஸில்தான் பிரயாணம் அதிகம் இருந்தது. எனக்கு கல்யாணம் ஆனது. அத்திம்பேருக்கும் ரயில்வேயில் வேலை இல்லையா? முதன் முதலில் சென்னைக்கு குடித்தனம் போகும்போது ரயிலில்தான் பயணம். பின்னர் எனக்கும் ரயில் பழகிப் போச்சு. அவருக்கு வடக்கே மாற்றல் ஆனது. பின்னர் முதல் வகுப்பு பயணங்களும் பழகிப் போச்சு.

ஆனால் அந்த நாட்களில் வாரணாசி போவதற்கு 48 அல்லது 56 மணி நேரம் பயணம். முதன் முதலில் இவ்வளவு நேரம் ரய்லிலேயே என்று சந்தோஷமாக இருந்தது. ஆனால் குழந்தைகள் பிறந்து அவர்களுக்காக இரண்டு நாட்கள் வேண்டிய சாப்பாடு, - பல் இல்லாத மாமியாருக்காக தனியாக ரவை உருண்டை, மெல்லிய ஓமப்பொடி - உடையில் பட்டன் அறுந்தால் தைக்க ஊசி நூல், வண்டியில் விளக்கணைந்துவிட்டால், ( இடார்ஸியில் பெட்டிகளை வேறு இஞ்சினில் கோர்க்கும் வரையில் நம் பெட்டியில் விளக்கு இருக்காது - உபயோகத்திற்கு தீப்பெட்டி, மற்றும் உப்பு, சர்க்கரை ஊறுகாய் என்று மூட்டை கட்டி - ஒரு சமயத்தில் பிரயாணமே வேண்டாம் என்று இருந்தது !
ஆனால் என் பெண் சொல்வதுபோல் ரயில் மற்ற வீட்டு வேலைகள் குறைவு. காய்கறி வாங்க வேண்டாம்; என்ன சமையல் என்று திட்டம் போட வேண்டாம்; முக்கியமாக சமையலறை சுத்தம் செய்கிற வேலையெல்லாம் கிடையாது :-)
இதெல்லாம் அந்தக் காலம். இப்போ காரியர் சாப்பாட்டுக்கு பதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் சாப்பாடு வருகிறது. வெள்ளிகூஜா...? கூஜா பழக்கமே போய்விட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள்தாம் தன்ணீர். அதுவும் கடைகளில் விற்கும் பாட்டில்கள்.

இப்போதும் டில்லியில் பெண் வீட்டிற்கு ரயிலில்தான் பயணம். அலுமினிய பேப்பரில் சாப்பாடும், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீருமாக போகிறோம். 2000 கிலோ மீட்டர் இன்று 36 அல்லது 34 மணி நேரத்தில் கடந்து விடுகிறோம். பல வருஷமாக ரயிலில் போய் வந்தாலும் மலைகளையும் ஆறுகளையும் இயற்கை காட்சிகளையும் ஜன்னல் வழியாகப் பார்த்து ரசிப்பது அலுக்காத ஒன்றாகதான் இருக்கிரது. சின்ன வயசில் மலைகளும் மரங்களும் மேகங்களும் ஓடுவது போல் தோன்றும். இன்று பகவானுடைய சிருஷ்டியை நினைத்து மலைப்பாக இருக்கிறது.

மற்றவை பின்.

உன் அன்புள்ள
அக்கா.

பி.கு:கடிதம் எழுதி மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது இல்லை? ஏதேதோ சின்ன சின்ன வேலைகள். குடும்பம் என்றால் அப்படித்தானே ? :-) இனிமேல் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது கடிதம் எழுத நிச்சயம் முயல்கிறேன் :-)

உன் அன்பு சகோதரி.

Friday, October 29, 2004

அன்புள்ள தங்கைக்கு,

நான் சின்ன வயதில் நம் தாத்தா பாட்டி கிராமத்தில்தான் நிறைய இருந்திருக்கிறேன். இதற்கு 2 காரணங்கள். ஒன்று, தாத்தா ஊர் 10 மைல் அளவில் பக்கத்தில் இருந்தது. ரெண்டாவது, நான் நம்ம அம்மாவின் 16 ம் வயதிலேயே பிறந்தது. அம்மாவுக்கு என்ன யாராவது பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்று இருந்திருகும் போல. அதோட பாட்டிக்கும் என்னை அழைத்து வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும். தாத்தா ஊர் சின்ன கிராமம். அகரஹாரம் என்பதில் மொத்தம் 8 வீடுகள். நம் தாத்தா வீடு தவிர இன்னும் ஓரிரண்டு வீடுதான் மாடியோடு காரை கட்டிடம். மீதியெல்லாம் மண் வீடு மேலே ஓடு போட்டிருக்கும். எல்லா வீட்டுக்காரர்களும் ஒருவருக்கொருவர் உறவுக்காரர்கள்.
தெருவில் ஒரு கோடியில் சிவன் கோவில். இன்னொரு கோடியில் பெருமாள் கோவில். பெருமாள் பெயர் நவநீத கிருஷ்ணன். கோவில் பக்கத்திலேயே மடைப்பல்ளி இருக்கும். கோவிலுக்கு கொஞ்சம் தள்ளி வாய்க்கால் ஓடும். 3, 4 படிக்கட்டு உண்டு. இந்த வாய்க்காலிலிருந்துதான் தாத்தா வீட்டு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்க்கள். அந்த வயல்களில் விவசாயம் செய்யும் குடியான தம்பதிகள் வீரப்பனும், அவன் மனைவி செம்பாயியும். செம்பாயிதான் மாடுகளைப் பராமரிப்பஹ்டு, மாட்டுத் தொழுவம் போன்ற வேலைகளை கவனிப்பது. பாலும் கறந்து கொடுப்பாள். காலை வேளையில் வீரப்பன் சால் சாலாக தண்ணீர் இறைக்கும்போது நாங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நஞ்சன் கூடு பல் பொடியால் பல் தேய்ப்போம். சால் தன்ணீர் சின்ன வாய்க்கால் வழியே ஓடி வரும்போது அள்ளி அள்ளி வாய் கொப்பளிப்போம். அப்போதெல்லாம் தண்ணீர் இப்போ போல் கெடுதல் செய்யாது. பளிங்கு போல் சுத்டமாக ஓடி வரும் தண்ணீர் தித்திப்பாக இருக்கும். நான் பல் தேய்த்து முடிப்பதற்கும் தயிர்க்கார சின்னம்மா வருவதற்கும் சரியாக இருக்கும். உடல் பெருமன் அளவில் பாட்டியும் அவளும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். தயிர் அளந்து ஊற்ற கொட்டாங்கச்சியை நன்றாக தேய்த்து மழமழவென்று வைத்திருப்பாள். எனக்கு கையில் தயிர் கொடுத்தால்தான் அவளுக்கு சந்தோஷம். அந்த நாளில் கள்ளம் கபடு அறியாது இருந்தோம். பெரியவர்களும் அப்படியே இருந்தார்கள்.
பாட்டிதான் என்றாலும் நான் ஒருத்திதான் கூடவே இருந்தேன் என்பதால் கண்டிப்பாகவே இருப்பார். அடிக்கடி அவர் சொல்வார்: " உண்க செல்லம்; உடுக்க செல்லம். ஆனால் சொன்ன வார்த்தைக் கேட்க வேணும்" என்பார். 50 வருஷம் முன்னால் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. தோட்டங்கள் மாமரங்களோடு நிறைய இருக்கும். ஆனால் அப்பவே தாத்தா தண்ணீர் பம்பு போட்டிருந்தார். கிணற்றிலிருந்து குழாய் வழியாக தண்ணீர் அருவியாகக் கொட்டுவது வேடிக்கையாக இருக்கும். அதைப் பார்ப்பதற்கு என்று தோட்டத்துக்கு போவோம். மாமரம் பூத்து வாசனை வந்து கொண்டிருக்கும். பிஞ்சு மாங்காய்கள் கிலைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். சிலது தரையில் விழுந்து பால் வாசனையுடன் இருக்கும். நல்ல குளுமையான காற்று. விலை மதிப்பிலாதது - மின்சாரக் காற்று இல்லை!
அக்ரஹாரத்தில் பெருமாள் கோவில். காலை மாலை இரண்டு வேளையும் நாயனகாரர்கள் வந்து வாசிப்பார்கள். காலையில் தயிர் சாதமும் மாலையில் கொத்துக் கடலை சுண்டலும் பிரசாதம். அந்தக் கோவில் அர்ச்சகரும் நம் உறவுக்காரர்தான். அவர் மடைப்பள்ளியில் மண் சட்டியில் சாதம் பண்ணி, தயிர் சாதமாக நைவேத்தியம் செய்வார். அந்த சமயத்தில் நானும் குளித்துவிட்டு மேள சத்தம் கேட்டவுடன் கோவிலுக்கு ஓடிப்போய் கை கூப்பி நின்று கொள்வேன். எல்லோருக்கும் தீர்த்தம், சடாரி ஆகி, கையில் "தொத்தியோன்னம்" கிடைக்கும் - சுடச்சுட. அது ஒரு தனி வாசனைதான். காரணம் மண் பானையா அல்லது கோவில் மாமா சாதத்தைக் காந்த விடுவதாகென்று தெரியாது. அந்த கோவில் மேளக்காரர்கள் பூஜை சமயத்தில் மேளம் வாசிப்பதும் பிற நேரங்களில் முடி திருத்துபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் வீடுகளில் கோவிலில் நடனம் ஆடும் பெண்களும் இருப்பார்கள்.
மாலையில் 6 மணிக்கு விளக்கு ஏற்றி சாயிந்தர பூஜை நடக்கும். நாயனம், சுண்டல் பிரசாதம் எல்லாம் ஆனபின் கோவிலைப் பிரதட்சிணம் பன்ணிவிட்டு வீட்டு வாசலில் நிற்கும் பாட்டியிடம் துளசியும் சுண்டலும் கொடுப்பேன். கோவிலுக்கும் நம் வீட்டிற்கும் ஒரு வீடு தூரம்தான். கோவில் தீபாராதனை நடக்கும்போது பாட்டி வீட்டு வாசற்படியிலேயே நின்று பெருமாளை சேவிப்பார். கோவிலுக்கு ஒரு நாளும் வந்ததில்லை.
உண்ண செல்லம் உடுக்க செல்லம் என்று சொன்னேனா? நம் வீட்டுக்குப் பின்னால் நிரைய தென்னை மரங்கள் இருந்தன. காலையில் குளிக்க வெந்நீர் போட அடுப்பில் தென்னை மர சாமான்கள் - பாளை, பன்னாடை, கொட்டாங்கச்சி போன்றவைதான் எரிபொருள். தவலையில் வெந்நீர் சுட்டுக் கொண்டேயிருக்கும். குளியலறையும் கரி படிந்து கறுப்பாக இருக்கும். குடியானவனிடம் சொல்லி தேங்காய், இளநீர் எல்லாம் பறிக்க சொல்வார் பாட்டி. இளம் தேங்காய்த் தயிர் பச்சிடி. அப்புறம் தேங்காயை அரைத்து பால் பிழிந்து பால் கொழுக்கட்டை செய்வார் பாட்டி. புழுங்கலரிசி, ஒட்டிக்கொல்ள கொஞ்சம் உளுத்தம்பருப்பு கொஞ்சமாக சேர்த்து தயிரில் ஊற வைத்து தேங்காய் உப்பு மிளகாயுடன் அரைத்து அரிசி வடை செய்வாள். எல்லாம் எனக்காகதான்.
இதை தவிர இளநீர் கணக்கில்லாமல் குடிக்கலாம். எவ்வளவு இனிமையான காலம் ! வீட்டுக் கினற்றில் தன்ணீர் நிறைய இருந்தாலும் ஓடுகிற வாய்க்காலில்தான் பாத்திரங்கள் தேய்ப்பதும் குளிப்பதும். தாத்தா பாட்டி மட்டும் வீட்டில் குளியல். பசு மாடுகள் 5, 6 எப்போதும் வீட்டில் இருக்கும். மாத்தி மாத்தி ஏதாவது ஒரு பசு மாடு கன்று போட்டு பால் கொடுத்துக் கொண்டே இருக்கும். பால் தயிருக்கு குறைவேயில்லை.
கூடம் ரொம்பப் பெரிதாக இருந்ததால் அக்ரஹாரக் கல்யாணங்கள் இங்கேதான் நடக்கும். ஒரு தரம் அஹோபில மட ஜீயர் அவர் பரிவாரங்களுடன் நம் வீட்டில்தான் ஒரு வாரம் தங்கினார்.
நம் கிராமம் பக்கத்தில் 2 மைல் தூரத்தில் திருநாராயண பெருமாள் கோவில் இருக்கு. கோவிலிருந்து கொஞ்ச தூரம் போனால் அகண்ட காவேரி. 1 அல்லது 1 1/2 மைல் அகலம் ஓடிக்கொண்டிருந்தது. கிராமத்திலிருந்து கோவிலுக்கு போகும் வழியில் ரெண்டு பக்கமும் கொடிக்கால் இருந்தது - அதாவது ஆத்திக்கீரை மரமும் அதன் மேல் வெற்றிலை கொடியைப் படர விட்டிருப்பார்கள். ஒரு பக்கம் வாழை மரங்கள். நெல் வயல்கள் பசுமைஅயாக இருக்கும். எல்லாத்துக்குமே தன்ணீர் நிறைய வேண்டும் என்பதால் எப்பவும் வாய்க்கால் நீர் பாய்ந்து கொண்டே இருக்கும். அதனால் மாட்டு வண்டியில் நாங்கள் திருநாராயணபுரம் போகும்போது தண்ணீர் சத்தமும் பச்சை வாசனையும் பூச்சிகள் சத்தமும் குகுளுவென்று இருக்கும். சில சம்யம் ரோடு நடுவே ஒரு பக்கமிருந்து மறுபக்கத்துக்கு தண்ணீர் பாம்பு ஓடும்.
பிரகலாதனுக்கு சாந்தமாக பெருமாள் காட்சி தந்த திருத்தலம் இது. நிறைய உற்சவம் நடக்கும். தேர் இழுப்பார்கள். நான்கூட இழுத்திருக்கிறேன்.
பாட்டி தாத்தா காலத்துக்கு பின்பு கிராமமே மறந்து போச்சு. யாருமே இல்லையே. இப்போ நம் அப்பா அம்மா காலமும் ஆகிவிட்டது. தெய்வம் ஒன்றுதான் சாஸ்வதம்.

உன் அன்புள்ள அக்கா

Tuesday, October 26, 2004

அன்புள்ள தங்கைக்கு,

சில நாட்கள் முன்பு தாத்தா பாட்டி கிராமத்துக்கு போனபோது ஸ்ரீரங்கமும் போனோம். 1955 -56 வருஷங்களில் ஸ்ரீரங்கத்திலேயே நம்ம உறவுக்காரர்களுடன் தங்கி திருச்சியில் படித்துக்கொண்டிருந்தேன் இல்லையா? நானும் அத்தைகளும் சம வயதுக்காரர்கள். அப்போதெல்லாம் கொள்ளிடத்திலும் தண்ணீர் இருக்கும். காவேரியிலும் தண்ணீர் இரு கரையும் புரண்டு ஓடிக்கொண்டிருக்கும். ஸ்ரீரங்கத்தில் கோவில் பக்கத்திலேயே உத்திர வீதியில் வீடு இருந்தது. மாலையில் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் வீட்டு உடையை மாற்றிக்கொண்டு கைகால்களை சுத்தம் செய்துகொண்டுதான் சமையல் அறையில் நுழைய வேண்டும். காபி பலகாரம் ரெடியாக இருக்கும். சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பிவிடுவேன். அந்த மாதிரி ஒரு வருஷம் பகவானை, தாயாரை தரிசிக்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அப்போதெல்லாம் இப்ப மாதிரி தினசரியிலேயே கும்பல் இருக்காது. அதனால் டிக்கெட் வாங்கும் வழக்கமெல்லாம் இருக்கவில்லை. தாயார் சந்நிதியில் நுழைந்து தாயாரை தரிசனம் செய்வேன். பிறகு 5 குழி 3 வாசல் வழியாக பெருமாள் சந்நிதிக்கு போவேன். அதென்ன 5 குழி 3 வாசல் என்கிறாயா?
ஸ்ரீரங்கத்து தாயார் படி தாண்டாத பத்தினி. பெருமாள்தான் தாயாரை சந்திக்க சந்நிதிக்கு வர வேண்டும். பெருமாள் வரப்போகிறார் என்றவுடன் 3 கோபுர வாசல்படியில் மண்டியிட்டு கைகளை தரையில் ஊன்றி எட்டி பார்ப்பாராம் தாயார். அதன் அடையாளமாக கல்லில் ஐந்து விரல் குழிகள் வாசல்படியில் இருக்கும். பெருமாளை சேவித்துவிட்டு கருட மண்டபத்தில் இருக்கும் கடைகளை கண்ணால் பார்த்துவிட்டு தெற்கு வாசல்படி வழியாக வீடு வந்து சேருவேன். ரொம்ப இனிமையான கவலையில்லாத பருவம்.
சின்ன வயதில் பாட்டியின் உறவுக்காரர்கள் வீட்டிற்கு பாட்டி அழைத்து செல்வார். எல்லாமே 13 வயதுக்குள்தான். ராத்திரி இருட்டி போயிருக்கும். எனக்கு சின்ன வயதில் இருட்டு மின்னல் இடி - சண்டையிடும் சத்தங்கள் எல்லாமே பயம்தான். வயது காரணமா அலல்து உடம்பு பலகீனமா என்று தெரியாது. ஸ்ரீரங்கத்து கோவிலுக்கு பக்கத்து தெருவில்தான் உறவுக்காரர் வீடு. கோவில் வாசல் வழியாக போக வேண்டும். கோவில் வாசலில் எப்போதும் யானை கட்டியிருப்பார்கள். இருட்டு வேளையில் யானை கத்துவதை கேட்க எனக்கு பயமாக இருக்கும். பாட்டியின் கையை பிடித்துக்கொள்வேன். பாட்டி சொல்வாள்: " அந்த தகர கொட்டகைக்குள்தான் யானை இருக்கிறது. பயப்படாமல் வா ' என்பார். நானும் தைரியமடைந்து பாட்டியுடன் போவேன். மறுநாள் காலை ஊருக்கு திரும்ப அதே வழியாகதான் போக வேண்டும். அப்போது பார்த்தால் யானை வெளியில்தான் நின்றுகொண்டு இருந்தது. பாட்டி காண்பித்த தகர கொட்டகை தேர் முட்டி. அதாவது கோவில் தேரை கொட்டகையில் உள்ளே வைத்து பூட்டியிருப்பார்கள். பாட்டி எப்படி சாதுர்யமாக சொல்லி என்னை அழைத்து போனார் என்று இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பக்கத்து தெருவில் வீடு என்று சொன்னேன் அல்லவா? அதனால் அந்த தெருவில் எப்போதும் பெருமாள் வீதி உலா வருவார். கோவிலில் பெருமாள் கிளம்பிவிட்டார் என்று தெரிந்ததும் வீட்டிற்கு எதிரில் வாளி வாளியாக தண்ணீர் தெளித்து பெருக்கி சுத்தம் செய்வேன். அவசரமாக புள்ளி வைத்து கோலம் போட காலம் இருக்காது. தகர குழல்கள் கோலம் போட என்று கடையில் விற்பார்கள். அதை எடுத்து கோலமாவு ரொப்பி தெரு அளவுக்கு கோலம் போடுவேன். கோலம் போடும்போது நம்முடைய கற்பனை வளம் நன்றாக வேலை செய்யும். மனம் போன வழியில் கையும் கைபோன வழியில் கண்ணுமாக அழகாக கோலம் அமையும். கோலம் முடியும் சமயம் பெருமாளும் வாசலுக்கு வந்திருப்பார். வீட்டு வாசலில் தீபாராதனை பண்ணுவோம். நான் போட்ட கோலத்தில் பெருமாளும் ஸ்ரீமான் தூக்கிகளும் நிற்பார்கள். அப்போது கிடைக்கும் ஆனந்தம் அளவு இல்லாதது.

உன் அன்புள்ள அக்கா

Thursday, August 26, 2004

அன்புள்ள தங்கைக்கு,

எனக்கு 10 அல்லது 11 வயது இருக்கும். நம் ஊர் பக்கத்தில் சிவன் கோயில் தெப்போத்ஸ்வம் நடக்கும். தெப்பக்குளம் என்றாலே தண்ணீர் நிரம்பி இருக்கும். அந்த வயதில் அந்த குளமும் நடுவில் நீராழி மண்டபமும் அதேபோல் நகல் எடுத்தாற்பொல் தெப்பமும் அலங்காரத்துடன் நிற்பதைப் பார்த்தால் ஏதோ வேறு லோகத்துக்கு வந்துவிட்டது மாதிரி இருக்கும். நீராழி மண்டபம் மலர்களால் வாழை மரம் மற்றும் அலங்கார விளாக்குகளுடன் பிரமாதமாக பிரகாசித்துக்கொண்டு இருக்கும். தெப்பம் மரக்கட்டைகளால் ஒரு மேடை மாதிரி அலங்கரித்து அதன் மேல் மண்டபம் மாதிரி பூக்களால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். படகு அல்லது பரிசல் ஓட்டுவதுபோல் நாலு பக்கத்திலும் தண்ணீரில் மூங்கில் கழிகளை ஊன்றி தெப்பத்தை நகர்ஹ்துவார்கள். தெப்பம் உள்ளே சுவாமி அலங்கரிக்கப்பட்டு வீற்றிருப்பார்.
நாதஸ்வர வித்வான்கள் அதன் உள்ளே உட்கார்ந்து வாசிப்பார்கள். தெப்பம் நகர ஆரம்பிக்கும்போது ராத்ரி 10 அல்லது 11 மணி ஆகிவிடும். தெப்பம் நகர ஆரம்பித்தவுடன் வாண வேடிக்கை வேட்டு போடுதல் நடக்கும். நீராழி மண்டபத்தை தெப்பம் அனேக தரம் சுற்றி சுற்றி வரும். திருவிழா குடிய விடியற்காலை ஆகிவிடும். மேலே கறு வானத்தில் நட்சத்திரமும் பூமியில் நாதஸ்வர ஓசையும் தெய்வ அலங்காரமும் ஏதோ சொர்க லோகத்தில் சஞ்சரிப்பதுபோல் இருக்கும். 50 வருடங்களுக்கு முன்னால் ஜனங்களுக்கு இதுபோல் திருவிழாக்கள்தாம் உற்சாகமான சமயம். நன்றாக நிதானமாக அனுபவித்து அதைப் பற்றி ஒரு வாரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அதுபோல் நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது பசுவின் யாத்திரை என்று ஒரு சிறுமிகள் சம்பந்தபட்ட விழா இருந்தது. அக்கரஹாரத்தில் இருக்கும் 10 வயது பெண் குழந்தைகள் மாலை வேலைகளில் ஒவ்வொரு வீடாக போய் கும்மி கோலாட்டம் ஆடிவிட்டு அந்த வீட்டுக் காரர்கள் கொடுக்கும் பரிசுப் பணத்தை வாங்கி வருவோம். ஒரு வாரம் ஆன பிறகு ஒரு பொது இடத்தில் கோவில் மாதிரி இடத்தில் பசு மாடு வைத்து அலங்காரம் செய்து அதற்கு பூஜை பண்ணி அங்கேயும் ஆட்டம் பாட்டம் என்று எல்லாம் இருக்கும். மொத்தமாக சேர்ந்த பணத்தில்தான் எங்கள் செலவுகள் இருக்கும். பூஜை செலவு போக மீதி இருந்தால் கும்மி கோலாட்டம் ஆடிய பெண்களுக்கு சட்டைத் துணியும் கிடைக்கும். இந்த மாதிரி பூஜையில் எனக்கு ஒரு தரம் சாட்டின் பிளவுஸ் துணி - சிகப்பு கலரில் - கிடைத்தது. அதெல்லாம் அந்த அறியா வயசுலே எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா?
இப்போது அதையெல்லாம் நினைத்துதான் பார்க்க முடியும். எப்படி பண்டிகைகள் ஏதோ ஒரு அவசரத்துடன் நடப்பது போல திருவிழாவையும் மக்கள் மறந்துவிட்டார்கள்.

மற்றவை பின்.

அன்புள்ள அக்கா.